ஆதி வார்த்தையும் இறுதி வார்த்தையும்
ஆதி வார்த்தையும்
இறுதி வார்த்தையும்
என்னிடம் உள்ளன
அவற்றை நான்
பயன்படுத்தியதில்லை
ஒவ்வொரு நாளும்
அவ்வார்த்தைகளை
எடுத்து துடைத்து
மெருகேற்றி. . . மீண்டும்
எடுத்த இடத்திலேயே
வைத்துவிடுவேன்
ஒளியிலும்
ஒலியிலும் ஏற்றச்சொல்லி
அவை அடம்பிடிக்கும்.
அந்தநேரங்களில் கவனமாய்
வேறு வேலைகளில்
மூழ்கிப்போவேன்
வார்த்தைகள் தெரிந்துகொண்டன
நாளையும் தாம்
வெளியேற முடியாது என்பதை
எனக்கான தயக்கம்
ஆதி வார்த்தையை
யாரிடம் உச்சரிப்பது?
இறுதி வார்த்தையை
என்று எப்போது
எந்த மனிதனிடம் கூறுவது?
No comments:
Post a Comment