கதவல்ல
என் வீட்டில் ஒரு
கதவு இருந்தது.
திறக்கலாம் மூடலாம்
எல்லாக் கதவும் போல
சில நேரங்களில்
யாரோ தட்ட
கதவு திறப்பேன்
பல நேரங்களில் நானே
விரும்பி வெளியேறுவேன்.
திறப்பதாலும் மூடுவதாலும்
விரியும் உலகு பார்த்து
வியப்பேன்.
இருந்தும் கதவுமீதிருந்த பயம்
அழியவில்லை.
கதவைப்
பெயர்த்து எடுத்துவிட
பலமுறை முயன்றுமிருக்கிறேன்.
எல்லா முறையும்
தோற்றுத்தான் போனேன்
எப்போதும்போல அன்றும்
கதவை மூடினேன்.
மறுநாள் யாரும் தட்டவில்லை.
காத்திருந்தேன்
மீண்டும் காத்திருந்தேன்
தட்டும் ஓசைக்காகக் காதுகள்
விரித்துக் காத்திருந்தேன்
தட்டும் ஓசை இப்போது
நினைவில்கூட இல்லை
அச்சம் பெருகவே
வெளியேறும் வெறியில்
வேகமாகக் கதவு திறக்க முயன்றேன்
திறந்துகொள்ள மறுத்தது கதவு
பயந்து உள்ளே பார்த்தேன்
வீடிருந்த சுவடே இல்லை.
மீண்டும்
கதவு பக்கம் திரும்ப
கதவே இல்லை.
No comments:
Post a Comment